Google Plus LinkedIn Email

Thursday, April 8, 2010

பைந்தமிழ்ப் பாவாணர் விழா

சவூதி அரேபியா ரியாத்தில், மார்ச் மாதம் 26 ஆம் நாள் 'வளைகுடா செந்தமிழ்ச் சங்கம்' நிகழ்த்திய பைந்தமிழ்ப் பாவாணர் விழா சிறப்பாய் நடந்தேறியது. குடும்பத்துடன் வசிக்காத, கடினமாய் உழைத்து வாழும் தனியர்களுக்கென பிரத்தியேகமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இவ்விழா.

கழியொன்றின் உச்சிமீது நெற்றியை வைத்துச் சுற்றி வருதல், நொண்டியடித்தல், குறிபார்த்து அடித்தல், உப்பல் ஊதுதல் என்ற விளையாட்டுகளில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றனர். ஆங்கில மொழி வார்த்தைகளைக்கு இணையான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பேசவேண்டும் என்ற விதிமுறையுடன் நடந்த 'தமிழ் பேசு' என்ற விளையாட்டும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

பழமொழி வாக்கியத்தின் வார்த்தைகளைச் சரியான வரிசையில் அடுக்குதல் - இந்த விளையாட்டிலும் மிகுந்த ஆர்வத்துடன் பலரும் பங்கேற்றனர். 'சிரித்து வாழ வேண்டும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பலரும் பங்கேற்றுப் பரிமாறிய கருத்துகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. 'மூன்று முட்டாள்கள்' என்ற நகைச்சுவை நாடகமும், ரியாத்வாழ் தமிழர்கள் நிலைகுறித்துக் கோடிட்டுக் காட்டிய 'தமிழா தமிழா' என்ற நாட்டிய நாடகமும் அரங்கேறின.

பாவாணர் அவர்களின் உற்ற நண்பரான புலவர் திரு. அரங்கராசர் பைந்தமிழ்ப் பாவாணர் குறித்த செய்திகளைத் தொகுத்துச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

தனி நபர்களின் திறமையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாய் விளங்கிய 'தனித்திறன்' நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றுப் பாடல் மற்றும் கவிதை பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
நமது உதவி' என்ற அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சமுதாய உதவிப்பணிகள் குழுவினர், மயிலாடுதுறையிலுள்ள 'கார்த்திகா ஆசிரமக்' குழந்தைகளுக்குத் துணிமணிகள் அனுப்பிவைத்தனர்.

இறுதியாய் 'நிலாச்சோறு' உண்டு இனிதாய் நிறைவேறிய இவ்விழா, விழாக்குழுவினரையும் சரி, பார்வையாளர்களையும் சரி, ஒருங்கே திருப்தியடைய வைத்தது.

இங்ஙனம்
விழாக்குழுவினர்

நன்றி நமது குழும உறுப்பினர் : கனகசபாபதி நவநீதன்

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons